2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதே சமயம் இம்முறை கரும்பு, வெல்லம் ஆகியவை தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு கரும்பு வழங்கப்படாது என்ற திமுக அரசின் அறிவிப்பால் செங்கரும்பினை விளைவித்த கரும்பு விவசாயிகள் மிகவும் பாதிக்கபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் பயிரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து தமிழக மக்களுக்கு வழங்க அரசின் கவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் எடுத்து செல்லுமாறு பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் பாண்டியன்,குமரேசன் மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் வசந்தசேனன்,வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனு அளிக்க அந்த பாஜகவினர் வெல்லத்தை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டும் தமிழக அரசு கொடுப்பதை கண்டித்து பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் ரூபாய் 5000 ரொக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை என்பதால் இந்துக்களை புறக்கணிக்கும் வகையில் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறது. பொதுவாக, அர்சி, சர்க்கரையுடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. வழக்கம் போல், இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கும் என எதிர்பார்த்து தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தனர். ஆனால், அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. கடந்தாண்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால், அதில் பல பொருள்கள் தரமற்றதாக இருந்ததாகவும், குறைவான பொருள்கள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.