600 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 95 வயதில் மறைவு

வாடிகன் சிட்டி: முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் (95) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்றவர் 16-ம் பெனடிக்ட். இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தார். ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடந்த 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இவர், ஜெர்மனியில் இறையியல் பாடம் கற்பித்தார்.

கடந்த 1977-ம் ஆண்டு இவர் முனிச் நகரின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அடுத்த 3 மாதத்தில் இவரை கார்டினலாக போப் 6-ம் பால் நியமித்தார். முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார்.

இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். பாதிரியார்கள் சிலர் மீது பாலியல்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, அந்த தவறுகளுக்காக இவர் மன்னிப்பு கேட்டார். ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த 16-ம் பெனடிக்ட் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார். தவறு செய்தவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்காததால், இவரது தலைமை குறித்தும் அப்போது விமர்சிக்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு இவர் தனது உடல்நிலையை காரணம் கூறி, போப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.கடந்த 600 ஆண்டுகளில், பதவியைராஜினாமா செய்த முதல் போப்16-ம் பெனடிக்ட் என்பது குறிப்பிடத் தக்கது

பதவி விலகியபின் வாடிகன் வளாகத்திலேயே, 16-ம் பெனடிக்ட் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தேவாலயங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து புத்தகங்கள், கட்டுரைகள் எழுதினார். நீண்ட காலமாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை அவரது உடல்நிலைமிகவும் மோசமடைந்தது. அவருக்காக உலகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிர் நேற்று பிரிந்தது. இது குறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டோ ப்ரூனி விடுத்த செய்தியில், ‘‘முன்னாள் போப் எமீரிடஸ் 16-ம்பெனடிக்ட், வாடிகன் மடாலயத்தில் நேற்று காலை 9.34 மணியளவில் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

முன்னாள் போப் இறுதிச்சடங்குதொடர்பாக எந்த விதிமுறைகளும்இல்லை. 16-ம் பெனடிக்டின் இறுதிச்சடங்கு, தற்போதை போப்பிரான்சிஸ் தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் போப் இரண்டாம் ஜான்பால் மறைந்தபோது, அவரது இறுதிச் சடங்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில், 16-ம் பெனடிக்ட் தலைமையில் நடந்தது.

அவரது இறுதிச்சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.