ஜகார்த்தா, கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது.
இதையடுத்து தனிம்பர் தீவில் உள்ள இரண்டு பள்ளி கட்டடங்களும், 15 வீடுகளும் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு பலத்த சேதமடைந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நில அதிர்வு மூன்று முதல் ஐந்து வினாடிகள் வரை நீடித்ததாக, அந்த நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது வெளியில் தஞ்சமடைந்தனர்.
இந்த நில அதிர்வை ஒட்டி சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடலில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாததைத் தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நில அதிர்வு ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி வரை உணரப்பட்டது.
கடந்த 2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 9.1 ஆக பதிவானது.
இதனால் ஏற்பட்ட சுனாமி காரணமாக இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement