கோவை: கோவையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வீதிமீறலில் ஈடுபட்ட சாலையோர உணவு கடைகளுக்கு அபராதம் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் உத்தரவுப்படி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்படி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச் செல்வன் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டி உணவு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 278 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறாமல் 95 கடைகள் இயங்கி வருவது தெரியவந்தது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்த 31 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
அத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 44 கிலோ பழைய மற்றும் கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 9,620 ஆகும். மொத்தம் 31 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.