கோவை: கோவையில் சிறுத்தை ஒன்று பண்ணைக்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது. கோவை கணுவாய் அருகே யமுனா நகரில் சுமார் 1.5 ஏக்கர் அளவில் பத்தாயிரம் கோழிகள் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பண்ணைகளில் இருந்து ஒன்றிரண்டு கோழிகள் காணாமல் போய் உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர், பண்ணையில் உள்ள சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளார்.
அப்போது நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று கோழிப்பண்ணைக்குள் புகுந்து கோழி ஒன்றை கவ்வி சென்றது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின்பேரில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணைக்குள் புகுந்து கோழியை சிறுத்தை கவ்வி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.