மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு விவசாயி வீட்டில் வளர்த்த 3 நாய்கள் விஷம் வைத்து கொலை?

*போலீசார் விசாரணை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே விவசாயி ஒருவர் வளர்த்து வந்த 3 நாய்கள் இறந்து கிடந்தன. கோழிக்கழிவுகளில் குருணை மருந்தை கலந்து அவை கொல்லப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை சிட்டேபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (எ) ரங்கசாமி (65). இவரது மனைவி நாகரத்தினம் (58). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் கர்நாடக மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் குத்தாரிபாளையம் பகுதியில் கணவனுடன் வசித்து வருகிறார். ரங்கசாமி  மற்றும் நாகரத்தினம் இருவரும் சிட்டேபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் தேவராஜ் மட்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வார்.

இதனால் தங்களது பாதுகாப்பிற்காக 3 நாட்டு நாய்களையும், ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயையும் ரங்கசாமி வளர்த்து வருகிறார். நேற்று காலை அவர்கள் வளர்த்த  3 நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ரங்கசாமி சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

நாய்கள் இறந்து கிடந்த இடத்தில் கோழிக்கழிவுகளுடன் குருணை மருந்து வாசனை வந்ததாக தெரிகிறது. எனவே   கோழிக்கழிவுகளுடன் குருணை மருந்து கலந்து மர்ம நபர்கள் நாய்களை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ஏற்கனவே ரங்கசாமி வீட்டில் கடந்த 2016ம் ஆண்டும் நாய்கள் கொல்லப்பட்டு அங்கு வளர்க்கப்பட்டு வந்த கோழிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. 3 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.