தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்ததால், நேற்று முழுவதும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை விலக்கி கொள்ளப்பட்டது. குற்றாலத்தில் கடந்த வாரம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில் பாதுகாப்பு கருதி நேற்று முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இன்று காலை தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்ததையடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் இன்று காலை சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.