புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “காந்தியடிகளின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன், அவரது ஆழ்ந்த சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். நமது நாட்டுக்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், “சுயசார்பு இந்தியா திட்டத்தின் முன்னோடி காந்தியடிகள். அவரது நினைவு நாளில் அவரை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “அன்பு செலுத்தி வாழ வேண்டும். அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி போதித்தார். நினைவு நாளில் அவரை வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.