மீண்டும் ஸ்ரெட்லைட்… உள்ளூர் மக்களுடன் வேதாந்தா நிறுவனம் பேச்சுவார்ததை..!!

கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உண்டாகுவதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததால் மே மாதம் 28ல் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்று கூறி ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்ததால் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்காலிகமாக மூன்று மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்தத நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்தது. தமிழக அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் உள்ளூர் மக்களுடன் வேதாந்தா நிறுவனம் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.