கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் தொழில் அதிபர் பாபுகுமார். இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவர் அந்தக் கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை.
இதனால், அவரது வீடு ஏலத்திற்கு வந்தபோது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை நானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் தெரிவித்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டுள்ளனர்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று பாபு குமாரின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.
அங்கு, அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, பாபுக்குமார் தேவையான மருந்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாபுகுமார் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
அதன் பின்னர், சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்த நாயை மட்டும் வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும், நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்