பெங்களூரு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையில், “கர்நாடக மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், அம்மாநிலத்தில் துங்கா மற்றும் பத்ரா இடையே அமைய உள்ள மேல் பத்ரா திட்டத்துக்கும் ரூ.5,300 கோடி நிதியுதவி அளிக்கப்படும்” என அறிவித்தார்.
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிற மாநிலங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படாத நிலையில், கர்நாடகாவுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு கர்நாடக மக்களின் வாக்குகளை குறிவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதா? வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களின் மீது உண்மையிலே அக்கறை இருந்தால் ஏன் கடந்த ஆண்டு நிதி அளிக்கவில்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தால் குடகு, மைசூரு, ஷிமோகா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும் நிதி அளிக்கப்படவில்லையே ஏன்? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.