கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத ஏரியில் மீன் வளர்க்க நீர்வளத்துறை ஏல அறிவிப்பு வெளியிட்டது அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் கழுமரம் கிராமத்தில் 26 ஏக்கர் 36 சென்ட் பரப்பளவில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரே இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து கிராமங்களிலும் ஏரிகளில் மீன் வளர்ப்பு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட நீர்வளத்துறை நேற்று மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மீன் வளர்ப்பது தொடர்பான ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மணலூர்பேட்டை அடுத்த கழுமரம் ஏரியும் அடங்கும்.
இதைக் கண்ட மணலூர்பேட்டை அடுத்த கிராமங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி வறண்ட ஏரியில் மீன் வளர்க்க ஏலமா என நகைச்சுவையாக பேசி வருகின்றனர்.
இதையடுத்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரியிடம் வறண்ட ஏரிக்கு மீன் வளர்ப்பு தொடர்பான அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, “வழக்கமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மீன் வளர்ப்பு தொடர்பாக மீன்வளத்துறை இடமிருந்து பரிந்துரை கடிதம் பெற்று அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தான் தற்போதும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. இருப்பினும் அடுத்த மழைக்கால பருவத்தில் பெய்யும் மழையில் நிரம்பினால் அந்த சமயத்தில் ஏலம் விடுவோம்” என்றனர்.