ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்; மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை போலீசார் முடக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் இளைஞர்கள் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார், துவரிமான் நான்குவழிச் சாலையில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த கேரளா பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த கார், நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதையடுத்து போலீசார், அந்த காரை சினிமா பாணியில் துரத்திப் பிடித்து சோதனை செய்தனர் அப்போது காரில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த மன்சூர்அலி, முதாலிப், நாசர் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM