சென்னை, ‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்த பட்ஜெட், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராம பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த பட்ஜெட்’ என, இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.
சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், சி.ஐ.ஐ.,யின் தெற்கு மண்டலம் மற்றும் தமிழக முன்னாள் தலைவர்கள் ரங்கநாதன், நாராயண் சேதுராமன், சந்திரமோகன் மற்றும் டாக்டர் சந்திரகுமார் ஆகியோர் பேசியதாவது:
வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண் சார்ந்த புத்தாக்க தொழில் நிறுவனங்கள் துவங்குவோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய கடன்கள் வழங்குவதற்கான இலக்கு, 20 லட்சம் கோடி ரூபாயாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்க, பரவலாக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும், வேளாண் உற்பத்தி அதிகரிப்பதுடன், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதன் வாயிலாக, 1 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இதேபோல, இ – வாகன துறையை ஊக்கவிக்கும் வகையில், ‘லித்தியம் பேட்டரி’க்கான ‘செல்’கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ‘டிவி’ தயாரிப்புகளுக்கான சில உதிரிபாகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை இந்த துறைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, கடன் உத்தரவாத திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதே போல பல்வேறு அம்சங்கள், இந்த பட்ஜெட்டில் உள்ளன.
எனவே, நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கான சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாகவும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்