திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள மெதிப்பாளையம் பகுதியில் ராஜேஷ் – அகிலா தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 14 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் இருந்தார். இந்தச் சிறுவன் தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், சிறுவன் மனோஜ்குமார் கடந்த சில மாதங்களாகச் சரிவரப் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சிறுவனுக்குப் போதைப் பழக்கம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், யாருடைய பேச்சையும் கேட்காமல் இருந்த சிறுவனை, அவர் பெற்றோர் கடந்த ஜனவரி 21-ம் தேதி சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியிலுள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சேர்ந்து பத்து நாள்களேயான நிலையில், கடந்த செவ்வாய் இரவு சிறுவன் கழிவறையில் மயங்கி விழுந்ததாக மறுவாழ்வு மையத்திலிருந்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சிறுவன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதனை செய்து, மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மனோஜ்குமாரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து சோழவரம் பகுதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து மறுவாழ்வு மையத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார், சிறுவனின் இறப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்த நிலையில், சிறுவன் கட்டையால் அடித்ததில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொலைக் குற்றம் தொடர்பாக மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய நான்கு போரைக் கைதுசெய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.