இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண்மணி வந்து மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக அமர்ந்து கொண்டு தர்ணா செய்தார். அப்போது, போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த அவர் தன்னைத்தானே அடித்துக் கொண்டு அழுது புலம்ப ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் பேசிய போது, “பொன்னம் சத்திரம் பெரியரங்கம் பாளையம் பகுதியில் இருந்து வருகிறேன். மகனுக்கு கல்வி உதவித்தொகை 60,000 வந்திருக்கிறது. நேரில் பேசிக்கொள்ளலாம் என்று அழைத்தார்கள். நேரில் போய் பார்த்ததற்கு அப்படி ஒரு திட்டமே இல்லை என்று கூறி விட்டார்கள்.
நானும் கணவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டோம். ஆதரவற்ற விதவை சான்றிதழ் இருந்தால் ஆயா வேலை தருவதாக கூறினார்கள். ஆனால், கொடுக்கவில்லை பொறம்போக்கு நிலம் கொடுக்கிறேன் என்றார்கள். அதையும் கொடுக்கவில்லை எனது மருத்துவ பிரச்சினைகளுக்கு நடுவில் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறேன்.
அவர்களை நன்றாக படிக்க வைக்க ஆசை. ஆனால், என்னிடம் எதுவும் இல்லை. எங்கு சென்றாலும் பணம் கேட்கிறார்கள். நான் என்னதான் செய்யட்டும்? என் ஊர் கார அண்ணன் ஒருத்தர் புதுசா நல்ல கலெக்டர் வந்திருக்கிறார் என்று மனு கொடுக்க தான் அழைத்து வந்தார். இல்லையென்றால் நான் வந்திருக்க மாட்டேன்.” என்று அழுது கொண்டே கூறினார்