அதிமுக பொதுச் செயலாளர் பதவியுடன் இபிஎஸ் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்த முன்னாள் எம்எல்ஏ

கும்பகோணம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவியுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் சிறப்புப் பூஜை செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதையொட்டி, கும்பகோண அதிமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கும்பகோணம் மாநகர அதிமுக சார்பில், பக்தபுரி ரவுண்டானா அருகில் ஒன்றியச் செயலாளர் கா.அறிவழகன் தலைமையிலும், நீதிமன்ற வாயிலில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கர்ணன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

முன்னதாக, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் தான் நினைத்த காரியம் வெற்றியடைந்ததையொட்டி, காந்தி பூங்கா எதிரிலுள்ள சமயபுரம் மாரியம்மனுக்கும், அங்குள்ள விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் செய்தும், வேத மந்திரங்களைக் கூறி தீபாராதனை காட்டி வழிபட்டார்.

பின்னர், ‘எதிரிகளை வீழ்த்திய எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளோடு பொதுச் செயலாளர் பதவியுடன் வாழ வேண்டும்’ என வேண்டி, திரிசூலத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்தார். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று, எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.