ஆஸ்கர் வென்ற 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை கவுரவித்த சிரஞ்சீவி

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. அக்குழுவினருக்கு தெலுங்குத் திரையுலகம் சார்பில் இன்னும் எந்த ஒரு பாராட்டு விழாவும் நடத்தவில்லை. ஆனால், நேற்று தனது மகன் ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த பார்ட்டியில் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை அழைத்து கவுரவித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

நிகழ்வில், இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி, இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் தனய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினர், நடிகர் வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

“அன்பானவர்கள் முன்னிலையில் எங்கள் ஆஸ்கர் வெற்றியாளர்களை கவுரவப்படுத்தியதுதான் ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உண்மையான கொண்டாட்டம். இந்திய சினிமாவுக்காக தெலுங்கர்கள் செய்த இந்த சாதனை வரலாற்றில் நிலைத்து நிற்கும்,” என இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.