ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் மோடி ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  ஜனநாயக நாடுகளின் 2023ம் ஆண்டுக்கான உச்சிமாநாடு வீடியோகான்பரன்சிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியினால் இயக்கப்படுகின்றது. பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. இதுவே  ஜனநாயகத்திற்கான மற்றும் உலகத்திற்கான சிறந்த விளம்பரமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்து என்பது உலகின் பிற பகுதிகளுக்கு முன்பே பண்டைய இந்தியாவில் ஒரு பொதுவான அம்சமாகும்.

நமது புனித வேதங்கள் பரந்த அடிப்படையிலான ஆலோசனை அமைப்புகளால் அரசியல் அதிகாரம் பயன்படுத்துவதை பற்றி பேசுகின்றன. பண்டைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் பரம்பரையாக இல்லாத குடியரசு அரசுகளின் வரலாற்று சான்றுகள் பல இருக்கின்றன. இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல, அது ஒரு ஆன்மா. இது ஒவ்வொரு மனிதனின் தேவைகளும், விருப்பங்களும் சமமான முக்கியத்துவம் பெற்றது என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. அதனால் இந்தியாவில் எங்களது வழிகாட்டும்  தத்துவமானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவது என்பதாக உள்ளது.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.