பண்பாட்டை சீரழிக்கும் படம் இயக்க மாட்டேன்: இயக்குனர் பேரரசு

திரைப்பட இயக்குனர் பேரரசு உணர்ச்சிகள் கலந்த கமர்ஷியல் படங்களை வழங்குவதில் கைதேர்ந்தவர். பல வெற்றி படங்களை தந்துதனக்கான தனி இடத்தை சினிமா உலகில் தக்க வைத்துக் கொண்டவர் இயக்குனர் பேரரசு. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம்திறந்தார்…
சினிமா மீது உங்கள் ஆர்வம்..
சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. அப்பா மணிமுரசு, அம்மா முத்து. படிக்கும் போதே சிறுகதைகள், கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். எங்க அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. படிப்பு மீது கவனம் செலுத்துமாறு கண்டிப்பார். திசை மாறி போய்விடக்கூடாது என்று அப்பா கண்டிப்போடு இருந்தார். அப்பாவுக்கு தெரியாம தான் கதை எழுத ஆரம்பிச்சேன். சினிமா அதிகமாக பார்ப்பேன். ஜன.1 முதல் டிச. 31 வரை எவ்வளவு படம் பார்த்துள்ளேன் என்று நோட்டு போட்டு எழுதி வைப்பேன். அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது.

யாரை போல படம் இயக்க ஆசை
சினிமா துறைக்கு வந்ததுக்கு அப்புறம் சேரன் மாதிரி படம் செய்ய ஆசை இருந்துச்சு. அவர் உதவி இயக்குனராக இருக்கும் போது நானும் உதவி இயக்குனர் தான். ஆனால் நான் இயக்குனராகும் முன் அவர் இயக்குனர்ஆகிவிட்டார்.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது
அவ்வளவு சீக்கிரம் கிடைக்கல. சென்னைக்கு உதவி இயக்குனராகத் தான் சென்றேன். முதல் நாள் பாரதிராஜா, பாக்யராஜிடம் கதை சொல்லலாம் என நினைத்து பெரிய கனவோட போனேன். ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் அவர்களை நேரில் கூடபார்க்க முடியல. பின்னர் இயக்குநர் ராமநாராயணனிடம் எனது குடும்ப நண்பர் குருசாமி சுப்பு மூலம் அறிமுகம் கிடைத்தது.
அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிவதற்கே ஓராண்டு ஆகிவிட்டது. அப்போது 'கோடுகள்' என்ற எனது சிறுகதையை பார்த்த ராமநாராயணன் உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார். 15 ஆண்டுகள் கழித்து தான் முதல் பாட வாய்ப்பு கிடைத்தது. திருப்பாச்சி படக்கதையை ரெடியாக வைத்திருந்தேன். அப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் விஜய் நடிப்பில் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சூட்டிங் ஸ்பாட்ல பெரிய ஹீரோ போல் நடந்து கொள்ள மாட்டார். வருவாரு.. கதைக்கான டயலாக்கிற்கு ஏத்த மாதிரி நடிச்சிட்டு போயிட்டே இருப்பாரு.

அடுத்து சிவகாசி படமும்…
திருப்பாச்சி படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த கதையை நான் விஜய்க்காக செய்யல. ஆனால்சிவகாசி கதை நான் அவருக்காக உருவாக்கியது. இரண்டு படமும் ரொம்ப ஹிட் ஆனதால விஜய் ரொம்பசந்தோஷப்பட்டார்.

ஏன் ஊர் பேரில படத்துக்கு தலைப்பு வைக்கிறீங்க..
எனக்கு தானாக அமைந்தது. பேரரசு என்றாலேஊர் பெயரில் தான் படம் எடுப்பார் என்பது தனித்துவம். சினிமாவில் சில சென்டிமென்ட் வெற்றி அடையலாம். அந்தவகையில் சென்டிமென்டாக ஊர் பெயரில் படத்தோட தலைப்பை வைக்கிறேன்.

அஜித்துடன் படம் இயக்கிய அனுபவம்..
அஜித் ஒரு ஜாலியான கேரக்டர். எதுவாகஇருந்தாலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்.

உங்களுடைய பன்முகத் திறமை பற்றி சொல்லுங்க..
இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடல் எழுதி இருக்கேன். திருப்பாச்சி படத்தில் நீ எந்த ஊரு.. என்றபாடல் எழுதினேன். வசனம், நடிப்பு எல்லாமே முயற்சி செய்து இருக்கேன்.

இன்றைய சினிமா உலகம்…
சினிமா உலகமே மாறிவிட்டது. சினிமா பற்றிய அறிவு மக்களிடம் அதிகமாகவே இருக்கு. நமது கலாசாரத்தையும்,பண்பாட்டையும் சொல்கிற மாதிரி படங்களை தர வேண்டும். கலாசார சீரழிவுகளை காட்டுகின்ற படங்களை இயக்குவதைதவிர்க்க வேண்டும். நான் அதுபோன்ற படங்களை நிச்சயம் இயக்க மாட்டேன். சமுதாயம் சார்ந்த படங்களை எடுப்பதற்கு தயாராகி வருகிறேன். இனிமே பணத்திற்காக படம் செய்ய மாட்டேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.