1000 ரூபாய்.. \"இவங்களுக்கு\" இல்லையா? யார் யாருக்கெல்லாம் பெண்களுக்கு \"உரிமைத்தொகை 1000\" கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கு, நிபந்தனைகள் உண்டு என்று தெரிவிக்கபட்டுள்ளதால் பெண்கள் இதனால் சந்தேகமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..

அந்தவகையில், 1000 உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் வரும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், ஜூன் 3ம் தேதி மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் பலமுறை விளக்கங்கள் தரப்பட்டுவிட்டன.. எனினும், யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்த சில தகவல்கள் அவ்வப்போது கசிந்தபடியே உள்ளன.

யாருக்கு கிடைக்கும்:

நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியுடையோர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகின்றன.. அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வருமானவரி:

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.. மேலும் இப்போது, ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது.

அதேபோல, அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்றும் சொல்கிறார்கள்..

அரசாணை:

இது தொடர்பாக அரசாணைகள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அரசின் மற்ற உதவித்தொகை திட்டங்களின் பயனடைபவர்கள் அதாவது முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் ஆகிய திட்ட பயனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை கிடைக்காது என்று தகவல்கள் கசிகின்றன..

இதனால், குடும்ப தலைவிகள் மத்தியில், கலக்கமும், குழப்பமும், சந்தேகமும் சூழ்ந்து வரும்நிலையில், இது தொடர்பாக உறுதியான அரசாணைகள் இதுவரை வெளியாகவில்லை என்பதே நிஜம்.. எனினும் எவ்விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அனைவருக்குமே உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் வலம்வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.