மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி… ஒடிசாவில் பயங்கரம்!

மீண்டும் பருவமழை

நாடு முழுவதும் தற்போது மீண்டும் பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வழக்கமாக கோடை மாதங்களில் மழை பெய்யும் போது ஏற்படும் இடி மின்னலை போல் மழை வெளுத்து வாங்கி வருகின்றது.

ஒடிசாவில் இடி மின்னல்

அந்த வகையில் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த மின்னலுடன் கனமழை பெய்தது.

அப்போ காவிரியில் தண்ணீர் வந்திடும்.. சூடுபிடித்த பருவமழை.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!

மின்னல் தாக்கி 10 பேர் பலி

அப்போது சுமார் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குர்தா மாவட்டத்தில் நான்கு பேர் மின்னல் தாக்கி மரணமடைந்தனர். இதேபோல் போலங்கிரில் இரண்டு பேரும் மற்றும் அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

மேலும் குர்தா மாவட்டத்தில் மின்னல் தாக்கி மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களும் மாநிலத்தின் பல பகுதிகளில் இதேபோல் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

எவ்வளவு மின்னல்

ஒடிசாவில் மதியம் 36,597 CC (மேகம் முதல் மேகம்) மின்னல் மற்றும் 25,753 CG (மேகம் முதல் தரை வரை) மின்னல் பதிவாகியுள்ளது என்று ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (OSDMA) தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் சுழற்சி

வடகிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி நிலவுவதாகவும் இதனால் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே ஒடிசா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.