தாத்தாவின் பாடலை சிதைத்து விட்டார்: ஏ.ஆர்.ரஹ்மான் மீது வங்க கவிஞர் பேரன் குற்றச்சாட்டு

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைதியானவர், அதிகம் பேசமாட்டார். ஆனால் சமீபகாலமாக அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சேவை வரித்துறையினர் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். அறுவை சிகிச்சை டாக்டர்கள் சங்கத்தினர் தங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி 50 லட்சம் வாங்கிய ரஹ்மான் அதை திருப்பித்தரவில்லை என்றார்கள். தாம்பரத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால் பெரும் பிரச்னைகள் உருவானது. இப்படியான சர்ச்சைகள் ரஹ்மானை சுற்றி வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. ஹிந்தியில் தயாராகி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ள படம் 'பிப்பா'. இந்த படம் 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வங்கதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியதை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வங்கதேசத்தை சேர்ந்து பிரபல கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய பாடல்களை பயன்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கசி நஸ்ருல் இஸ்லாம் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சிதைத்து விட்டார். அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கசி நஸ்ருல் இஸ்லாமின் பேரன் அனிர்பன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “எனது தாத்தா 1922ல் சிறையில் இருந்தபோது எழுதிய அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த முறையில் மறு உருவாக்கம் செய்வார் என்று நம்பி டியூனை மாற்றக்கூடாது என்ற நிபந்தனையோடு அதற்கான உரிமையை வழங்கினோம். ஆனால் அதை அவர் சரியாக செய்யவில்லை. பாடலை சீர்குலைத்து விட்டதை பார்த்து அதிர்ச்சியானோம். அந்த பாடலை 'பிப்பா' படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நஸ்ரூலின் குடும்பத்தினரிடம் 'பிப்பா' படக்குழு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து ரஹ்மான் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.