கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்திய அணியை நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிபோட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் மார்ட்டின் கப்தில் அடித்த த்ரோ நேராக ஸ்டம்பைத் தாக்கியதால் நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அப்போது பறிபோனது. தோனி கண் கலங்கியபடியே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளைக் கடந்த பிறகும் 2019-ல் தோனியின் ரன் அவுட்டிற்காக தன்னைத் திட்டி வெறுப்பு மெயில்கள் வருவதாக மார்ட்டின் கப்தில் தெரிவித்திருக்கிறார். தற்போது அந்தச் சம்பவம் குறித்த நினைவினைப் பகிர்ந்தவர், “யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த விஷயங்களில் அதுவும் ஒன்று. தோனி அடித்த பந்து மேலே செல்வதைப் பார்த்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அப்போதுதான் எனக்குத் தோன்றியது அது என்னை நோக்கிதான் ஒருவிதமாக வருகிறது என்று.
எதிர்பாராவிதமாக அந்த த்ரோ மிகச்சரியாக ஸ்டம்பைத் தாக்கி தோனியை ஆட்டமிழக்க வைத்தது. அப்படி நான் தோனியை ரன் அவுட் செய்ததிலிருந்து இந்திய ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. இந்திய ரசிகர்களிடம் இருந்து இன்னமும் ‘தோனியை ஏன் ரன் அவுட் செய்தீர்கள்?’ என்று எனக்கு ஏராளமான வெறுப்பூட்டும் மெயில்களை அனுப்பி வருகின்றனர்” என்று மார்ட்டின் கப்தில் கூறியிருக்கிறார்.