`மாநகரம்’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி’, `மாஸ்டர்’, `விக்ரம்’ மற்றும் `லியோ’ படங்களை இயக்கிக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் வெளியான விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு ‘கைதி -2’ மற்றும் ரஜினியின் 172வது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கி, தனது அடுத்தடுத்தப் படங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ். இந்நிலையில் தற்போது ‘G Squad’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள லோகேஷ், “ஐந்து படங்களை இயக்கியப் பிறகு கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் எனது புதிய முயற்சியாக ‘ஜி ஸ்குவாட் (G Squad)’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவது குறித்தான அறிவிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிறுவனத்தின் முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது. எனக்கு அளித்த அதே ஆதரவை இதற்கும் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முதல் படத்தின் தயாரிப்புக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.