Paruthiveeran: "அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை!" – கவிஞர் சினேகன்

`பருத்திவீரன்’ படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக அமீருக்கும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே உண்டான சர்ச்சைகள் கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஞானவேல்ராஜா, “அமீர் கடனில் இருந்தார், அவருக்கு உதவுவதற்காகத்தான் ‘பருத்திவீரன்’ படத்தை நான் தயாரித்தேன். படப்பிடிப்பில் செலவானதற்கு அவர் சரியாகக் கணக்குக் காட்டவில்லை” என்று கூறியிருந்தார். மேலும், அமீருக்குச் சரியாகப் படம் எடுக்கத் தெரியாது, அவரின் ‘ராம்’ படத்தின் இயக்கம் சரியாக இல்லை. அப்படி இருந்தும் ‘பருத்திவீரன்’ படம் மூலம் அமீருக்கு நாங்கள் வாய்ப்புக் கொடுத்தோம் என்றெல்லாம் ஞானவேல்ராஜா பேசியது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

இயக்குநர் அமீர்

இதற்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் அமீர், “நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்குச் சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும்” என்று பதிலடி கொடுத்திருந்தார். இதைதொடர்ந்து ‘பருத்திவீரன்’ படத்தில் பணியாற்றிய சமுத்திரக்கனி, பொன்வண்ணன் மற்றும் சசிக்குமார், சுதா கொங்கரா உள்ளிட்டப் பலரும் அமீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் ‘பருத்திவீரன்’ படத்தின் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் சினேகன், இவ்விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாடலாசிரியர் சினேகன், “நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. ‘பருத்திவீரன்’ படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.