109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை முடக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு

மதுரை: ”109 ஆண்டுகளாக செயல்படும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலலை முடக்கப் பார்க்கிறார்கள்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் மருத்துவர்கள் தேர்தலில் வாக்களித்து எனது தலைமையில் 7 உறுப்பினர்களை தேர்வு செய்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அமைப்பு செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறையும் தேர்தல் மூலம் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 109 ஆண்டுகளாக தடைபடாமல் தேர்தல்கள் நடத்தப்பட்டு இந்த அமைப்பு தேர்வு செய்து நிர்வாகம் நடத்தப்பட்டு வந்தது. அதுபோல், கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்தபிறகு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது.

தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப திருத்தியப்பின் தேர்தலை நடத்தலாம் எனக்கூறி தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை டாக்டர் செந்தில் தலைமையிலான கவுன்சில் செயல்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், புதிய சட்டதிருத்தத்தை, கவுன்சில் நிர்வாகிகளிடம் ஆலோசித்து கொண்டு வரும்படியும் கூறியிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டு அதன் மூலம் எனது தலைமையிலான நிர்வாகத்தினை நீக்கிவிட்டு சுகாதாரத் துறை செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட ‘அ-டாக்’ குழு ஒன்றை அமைத்தது. முறையாக தேர்தல் மூலம் வெற்றிப்பெற்று கவுன்சிலை நிர்வகித்து வந்த நிர்வாகிகளை நீதிமன்ற ஆணை இருந்தும் நீக்கிவிட்டு ஜனநாயக விரோத போக்காக அதிகாரிகளை கொண்டு கவுன்சிலை முடக்கப் பார்க்கிறார்கள்.

தமிழக அரசு தன்னிச்சையாக தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் சட்டத்தை புதிதாக நிறைவேற்ற ஒரு வரையறை தயார் செய்துள்ளது. இந்த வரையறை நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவில்லை.

மேலும், ஜனநாக விரோத போக்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு செய்த உறுப்பினர்கள் 7 பேராகவும், அரசாங்கம் நியமிக்கும் உறுப்பினர்கள் 10 பேராகவும் இந்த குழுவை மாற்றியமைத்து தன்னிச்சையாக தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் செயல்பட வைக்க புது சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

புது சட்டத்தை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாகிய எங்களையும் கலந்து ஆலோசித்து ஆணையிட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதப் பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சில போராட்டங்களை அறிவிக்கவும், இவை யாவும் பலன் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முன்னாள் செயற்குழு உறுப்பினர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், அரசு மருத்துவுர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.