விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கிறது, ‘லால் சலாம்’.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிற இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
விஷ்ணு விஷால் பேசுகையில், ” 90 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, சில விஷயங்களை புனைவாக சேர்த்துதான் இந்தப் படத்தை பண்ணியிருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் ‘இந்தியா – பாரத்’னு பெயர் மாறுதுங்கிறதை பத்தி ஒரு ட்வீட் போட்டுருந்தேன். பாரத், இந்தியாலாம் ஒன்னுதானே ஏன் பெயர் மாறுதுனு ஒரு ட்வீட் போட்டேன். அது அப்போ வைரல் ஆகுச்சு. இதுவரைக்கும் என் வாழ்கைல அரசியல் சார்ந்து எந்தப் பதிவும் போட்டது இல்ல. இந்த விஷயத்துல ஒரு இந்திய குடிமகனாக போட்டேன். அதுக்கு பிறகு ரெண்டு நாள்ல நான் ஆண்டி- இந்தியன், ஆண்டி – இந்து வாக மாற்றிட்டேன். அப்படிதான் சமூக வலைதளங்கள்ல பதிவு போட்டுட்டு இருந்தாங்க.
என் மனைவி பாதி சைனீஸ். அதுனால இப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டேன்னு போட்டாங்க. ஒப்பீனியன் மாறலாம். அதை ஒத்துக்கணும். அதுதான் மனிதநேயம். இந்தப் படத்தைப் பத்தி என்கிட்ட சொன்ன சமயத்துல என் பையனோட அம்மா எனக்கு கால் பண்ணி ‘இந்த படத்துல நீ நடிக்கிறியா’னு கேட்டாங்க. ஆமா, ‘உனக்கு எப்படி தெரியும்’னு கேட்டேன். ‘ரஜினி சார் எனக்கு கால் பண்ணி இந்த படத்துல விஷ்ணு நடிச்சா நல்லா இருக்கும்னு ஐஸ்வர்யா சொன்னா, நானும் நடிக்கிறேன். உனக்கு ஓகேதானே’னு கேட்டிருக்கார். என் பையனோட அம்மா பெயரும் ரஜினிதான். தன்னோட நண்பர் ஓட மகளுக்காக இந்த விஷயத்தைப் பண்ணியிருக்கார். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்ங்கிற பட்டத்துக்கு காரணம் மனசுதான்.” என பேசி முடித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ” விளையாட்டு வினையாக முடிஞ்ச என்ன ஆகும்ங்கிறதுதான் ‘லால் சலாம்’ படத்தோட கதை. இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் விஷ்ணுதான் எனக்கு இந்த படத்தோட கதையை சொன்னார். அவர் ரெண்டு கதை என்கிட்ட சொன்னார். முதல்ல இந்த படத்தோட கதைக்கு ‘திசையெட்டும் பரவட்டும்’னு பெயர் வச்சிருந்தாங்க. இந்த கதையை சொன்னதுக்குப் பிறகு ‘ இந்த கதையை படமாக உங்களால பண்ணமுடியுமா’னு கேட்டாங்க. ‘ பண்ணமுடியாதுனா ஏன் சொன்னீங்க’னு கேட்டேன். ‘இந்த மாதிரியான படம் நீங்க பண்ணினா நல்ல ரீச் கிடைக்கும்’னு சொன்னார். இந்த படத்தோட கதையாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளார் விஷ்ணுவை எனக்கு ‘3’ படம் சமயத்திலேயே தெரியும். அவர் எப்போவும் படிச்சிட்டே இருப்பார். இந்தப் படம் கற்றலுக்கான, கடின உழைப்புக்கான பயணமாகதான் பார்க்குறேன். ஒரு விளையாட்டை நம்ம உடல் ஆரோக்கியத்திற்காக விளையாடுறோம்.
அதுல இன்னும் ‘யாரு இங்க வெயிட்’னு காட்டும் போது போட்டி ஏற்படுது. அந்த போட்டியோட இந்த விளையாட்டு ஆரம்பிக்கும்போது பிசினஸ் ஆகுது. அதுக்குப் பிறகு வெறி ஆகுது. இதுதான் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் கரு. இந்தப் படம் ஒரு சின்ன அரசியல் பேசுது. மக்களுக்குள் இருக்கிற அரசியலை பேசுது. குடிமகன்களாக இருக்கிற எல்லோருக்கும் அரசியலோட இரு பகுதி இருக்கு. நேர்மையாக இருந்தால் மலையைக்கூட கட்டி இழுத்திடலாம்ங்கிறதுக்கு எடுத்துக்காட்டு ‘லால் சலாம்’. நடிகர் செந்தில் சார்தான் இந்த படத்தோட எமோஷன். இந்த படத்துல நடிச்சிருக்கிற ஜீவிதா மேம் அவங்களோட மகள்களுக்காகதான் பேச வந்தாங்க. ‘நீங்க நடிக்கிறீங்களா’னு நான் கேட்டேன். அவங்க ‘ இப்போ நடிக்கிறது இல்ல’னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு கதையை கேட்டாங்க .
30 வருஷத்துக்குப் பிறகு ரீ- என்ட்ரி கொடுத்திருக்காங்க. லால் சலாம் படத்தை 91 நாட்கள் ஷுட் பண்ணினோம். இந்த நாட்கள் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சினிமாவுல சண்டை நடக்காத ஷூட்டிங் செட் இருக்காது. ‘ லால் சலாம்’ செட்ல சண்டையே வரல. இன்னைக்கு காலைலகூட நான் ரஹ்மான் சார்கூட சண்டை போட்டேன்.ரிலீஸ் சமயத்துல வெளிநாட்டுல இருக்கீங்கனு. ஆனா, அவர் அடிக்கடி கால் பண்ணி பேசிட்டே இருக்கார். 90களின் ரஹ்மானோட கம்பேக் ‘லால் சலாம்’. இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா முடிஞ்சதுக்குப் பிறகு அப்பாகிட்ட விமான நிலையத்துல ஒரு கேள்வி கேட்டாங்க. அப்போ அப்பா அவரோட கருத்தை சொல்லிட்டாங்க.
நான் அதிகமாக பேசமாட்டேன்னு அப்பா இசை வெளியீட்டு விழாவுல இருந்தாரு. ‘உங்க மகள் பேசிய விஷயங்கள் தந்திரமா’னு அப்பாகிட்ட ஏர்போர்ட்ல கேட்டாங்க. என் மூலமாக தந்திரம் பண்ணியோ, படத்துல அரசியல் பேசியோ ‘சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் ஓடணும்னு இல்ல. அரசியல் பேசாத திரைப்படம் ‘ஜெயிலர்’. அந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாச்சு. நான், என் சகோதரினு மட்டுமில்லாம எல்லோரோட சொந்தக் கருத்தையும் மதிக்கக்கூடிய மனுஷன் அவர். அவர்கிட்ட அந்த கேள்வியை கேட்காம இருந்திருக்கலாம். என்கிட்டகூட அந்த கேள்வியைக் கேட்டிருக்கலாம்.” என பேசி முடித்தார்.