கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 3, பாஜகவுக்கு ஒரு சீட் – மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி: கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13 மாநிலங்களில் இருந்து 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், 41 உறுப்பினர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், மீதமுள்ள 15 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றதை அடுத்து, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

உத்தரப் பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் ஒன்று என மொத்தம் 15 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த மூன்று மாநிலங்களிலும் நடைபெற்றது.

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், சையது நசீர் ஹுஸைன், ஜி.சி. சந்திரசேகர் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். பாஜக சார்பில் நாராயண்சா பண்டேஜ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டி ஆகியோர் நிறுத்தப்பட்டனர். இதில், காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும், பாஜகவின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் மக்கான் 47 வாக்குகளையும், சையத் நசீர் ஹூசைன் 46 வாக்குகளையும், ஜி.சி. சந்திரசேகர் 46 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் நாராயண பண்டேஜ் வெற்றி பெற்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வி அடைந்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையை இந்த தேர்தல் வெளிக்காட்டியுள்ளது. அனைத்து எம்எல்ஏக்கள், கட்சியினர் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. காங்கிரஸ் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல்வர் சித்தராமையா, கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சையத் நசீர் ஹூசைன், “காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு நன்றி. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொறியில் எங்கள் எம்எல்ஏக்கள் சிக்காமல் இருக்க நெருக்கமாக கண்காணித்து இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, சோமசேகர் கட்சி மாறி வாக்களித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் உதய்வீர் சிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் நடைபெற்ற 3 முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி சார்பில் தெரிவித்திருந்தோம். எங்கள் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. எங்களின் குறைகள் தீர்க்கப்பட்டு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பாஜக 8 வேட்பாளர்களை நிறுத்தியது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 3 வேட்பாளர்களை நிறுத்தியது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி, பாஜக 7 உறுப்பினர்களையும், சமாஜ்வாதி கட்சி 3 உறுப்பினர்களையும் மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும் எனும் நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களில் சிலர் கட்சி மாறி வாக்களித்ததால், அது குறித்து அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.