இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளத்தை துவங்கி வைத்த கேரள முதல்வர்
கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் ஓடிடி தளங்களில் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. திரைப்படம் வெளியான சில வாரங்களில் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட ஓடிடி தளங்கள் ஓரளவுக்கு உதவுகின்றன.
அதேசமயம் இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது போர்க் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் பிரபலமான படங்களை மட்டுமே இந்த ஓடிடி தளங்கள் வாங்குவதாகவும், சிறிய பட்ஜெட் படங்களை கண்டு கொள்வதில்லை என்பதும் சமீபகால குற்றச்சாட்டாக இருக்கிறது. அதனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுத்துவிட்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக அரசாங்கம் மூலம் நடத்தப்படும் 'சி ஸ்பேஸ்' என்கிற ஓடிடி தளத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துள்ளார். கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இந்த 'சி ஸ்பேஸ்' ஓடிடி தளம் செயல்பட இருக்கிறது. கலாச்சாரத்தை மேம்படுத்தக்கூடிய, நல்ல கதைய அம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை இந்த ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட புதிய வாய்ப்பு உருவாகி உள்ளது.