திருவனந்தபுரம் (கேரளா): நான் 15 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறேன். இந்த மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக. அதே வேலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். அதன்படி, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூர் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர் களமிறக்கப்படுவது இதுவே முதல் முறை. இவர் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “நான் 15 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறேன். அப்பகுதி மக்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், எனது சேவையைப் பார்த்திருக்கிறார்கள். இத்தொகுதியில் நடைபெற்ற அனைத்து முக்கிய பிரச்னைகளிலும் நான் பங்கு பெற்றுள்ளேன். நான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.