புதுடில்லி, திண்டுக்கல், அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, டாக்டர் சுரேஷ்பாபுவை விடுவிப்பதாக கூறி 2023 டிச., 1ல், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது. தமிழகத்தை விட்டு வெளியேறக் கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்ட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அமர்வு விசாரித்தது. ஏப்., 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
முன்னதாக, காவல் நீட்டிப்புக்காக, திண்டுக்கல் நீதிமன்றத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அங்கித் திவாரி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய காவலை எட்டாவது முறையாக ஏப்., 4 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.