‘கேஜ்ரிவால் கைது… சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

மதுரை: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இது குறித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

“விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வரத் தயாராக இல்லை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொன்னார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என முன்னாள் மத்திய அமைச்சரான அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதல்வர் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார்.

இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா, கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.