மத்திய மந்திரி ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

பெங்களூரு,

பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் விஷயத்தில் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் மத்திய இணை மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை மந்திரி ஷோபா, பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அவரது இந்த கருத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார். தேர்தல் விதிகளை மீறி பேசிய மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து தி.மு.க. அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய மந்திரி ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்முறையைத் தூண்டும் வகையிலும், மதப் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாகவும் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.