புதுடெல்லி: ஐ.நா. சபையில் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதாவது:
வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த இலக்கை எட்டுவதற்கான பயணத்தில் பெண்களின் முழுமையான மற்றும் சம அளவிலான பங்கு இருக்கும். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி சிறப்பாக தலைமை ஏற்று நடத்தினார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமிர்த காலம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மூலம் உலகளவில் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. வரும் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது என்பது பெண்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அங்கீகரிப்பதைப் பொருத்தது.
பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் இந்தியாவின் சமூக-பொருளாதார, அரசியல், கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.