ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் திமுக தேர்தல் அறிக்கையை கண்டித்து மறியல் செய்த வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், டெல்டா விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணைக்காட்டுவதை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து கன்னட சலுவளி ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50 பேர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் தமிழக எல்லைப்பகுதிக்குள் நுழைந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட முயன்றவர்களை கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்பாட்டம் செய்ததால், தமிழக எல்லை ஜூஜூவாடியில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகவிற்குள் அனுமதிக்காமல் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆர்பாட்டம் முடிந்த பின் கர்நாடகவிற்கு செல்ல அனுமதித்தனர்
செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் “எம்ஜிஆர், கருணாநிதி முதல் தமிழக அரசியலில் மேகதாது குறித்து பேசியே அரசியல் செய்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக ஏங்கி நிற்கும் சூழலில் தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டுமானால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து செல்லுங்கள்” என்று கூறினார்.