அமெரிக்க பாலம் விபத்து: 2 உடல்கள் மீட்பு

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில், பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. பாலத்தில் சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்ஸிகோ நாட்டுப் பணியாளர்களில் 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரைத் தேடும் பணி 24 மணிநேரம்வரை நீடித்த நிலையில், நீரின் தட்பவெப்ப நிலை உள்பட பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து மீட்புப் பணிகளை அமெரிக்க கடலோரக் காவல்படை கடந்த 26-ம் தேதி மாலை கைவிட்டது.

இந்த நிலையில், நீரில் மூழ்கிய டிராக்டரில் இருந்து மேலும் இருவரின் உடல் மீட்கப்பட்டதாக மேரிலாண்ட் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் குவாத்தமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பால்டிமோர் நகர துறைமுகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலம் 1977-ல் திறந்து வைக்கப்பட்டது. 2.6 கி.மீ. தொலைவுக்கு நான்குவழி பாதையாக உருவாக்கப்பட்ட இந்த பாலத்தை ஆண்டுக்கு 1.10 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.