குஜராத் மாநிலம், வல்சாத் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் ஓம் பிரகாஷ் யாதவ் என்பவர் 2018-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, 6-ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமியிடம் மாணவர்களின் நோட்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஸ்டாஃப் ரூம் வரக் கூறியிருக்கிறார். அந்த மாணவியும், துணைக்கு மற்றொரு மாணவியை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குச் சென்றிருக்கிறார்.
அதைப் பார்த்த ஓம் பிரகாஷ் யாதவ், உடன் வந்த மற்றொரு சிறுமியை மீண்டும் வகுப்பறைக்குச் செல்லக் கூறிவிட்டு, அந்த மாணவியை மட்டும் உடன் இருக்க வைத்திருக்கிறார். பிறகு அந்த அறையின் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு அந்த மாணவிக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி, அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரின் பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறார்.
உடனே அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பிறகு சிறப்பு போக்சோ வழக்கை விசாரிக்கும் நீதிபதி புரோகித், “குழந்தை பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் பெற்றோருக்குச் சமம். ஓர் ஆசிரியரின் நிலை சமூகத்தில் மிகவும் நற்பெயரைக் கொண்டிருக்கிறது.
மேலும் அவர் பண்பட்ட சமுதாயம் மற்றும் தேசத்தை வளர்க்க உதவுகிறார். ஆனால், சில ஆசிரியர்களால் இது போன்ற நம்பிக்கைகள் தகர்க்கப்படுகின்றன. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஓம் பிரகாஷ் யாதவுக்கு ரூ.9,000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.