சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப்.19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் பொது விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது, என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழகம் உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழகத்தின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.