‘ஏ.சி.சண்முகம் கேம்..!’ – உளவுத்துறை நீட்டிய ரிப்போர்ட்; வெடித்துப் பேசிய துரைமுருகன்!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கதிர் ஆனந்திடம் கடந்த முறை வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பின்தங்கிய ஏ.சி.சண்முகம், இந்த முறை அனுதாப அலையில் கரை சேர முயல்கிறார். பிரதமர் மோடியை வேலூருக்கு அழைத்து வந்தும் வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் ஏ.சி.சண்முகம். இந்த நிலையில், கடந்த வாரம் இருந்த கள நிலவரம், இந்த வாரம் தலைகீழாக மாறியிருப்பதும் தி.மு.க தரப்பைக் கடுமையாக ‘அப்செட்’ ஆக்கியிருக்கிறது. கள நிலவரம் மாறியதற்குப் பின்னணியில் சில `டீல்’கள் இருப்பதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

துரைமுருகன்

கதிர் ஆனந்தின் தந்தையும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் உளவுத்துறை நீட்டியிருக்கும் ‘டீல் ரிப்போர்ட்’ தந்தை, மகனை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இருவரும் யார் யாரையெல்லாம் நம்பினார்களோ, அவர்களில் சிலர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, வேலூர் மாநகராட்சியிலுள்ள சில ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலரும் ‘சமூக’ ரீதியாக ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதும், இன்னும் சில கவுன்சிலர்கள் கதிர் ஆனந்த் மீதான அதிருப்தியில் ஏ.சி.சண்முகம் தரப்பினரிடம் பேசியதாகவும், உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை, வேலூர் மாநகர தி.மு.க அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடத்திய அமைச்சர் துரைமுருகன், பட்டியலை வாசித்து கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ‘‘சத்துவாச்சாரி, ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தி.மு.க பலவீனம் அடைந்திருக்கிறது. என்னக் காரணம். விளக்கம் கொடுங்கள்’’ என்றும் சத்தம் போட்டிருக்கிறார் துரைமுருகன்.

அதோடு மட்டுமல்லாமல், ரங்காபுரம் பகுதியில் வசிக்கும் தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க வேட்பாளருக்குச் சால்வை அணிவித்தது தொடர்பாகவும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளருக்குச் சால்வை அணிவித்த நிர்வாகி உடனே எழுந்து விளக்கம் தர முயன்றார். அப்போது, ‘உட்காருய்யா… அங்கு நடந்தது எனக்குத் தெரியும்’ என்றும் கோபப்பட்டிருக்கிறார் துரைமுருகன்.

ஏ.சி.சண்முகம்

சத்துவாச்சாரி 20-வது வார்டு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி இருக்கிறது. அங்குள்ள அந்தக் கட்சி பிரமுகர் ஒருவரும் ஏ.சி.சண்முகம் தரப்பைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு பிரசாரத்தில் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருப்பதாகவும் கொதித்திருக்கிறார் துரைமுருகன். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னும் இரண்டு கவுன்சிலர்களும் ஏ.சி.சண்முகத்திடம் பேசியுள்ளார்களாம். அதையும் குறிப்பெடுத்துக் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. இந்த ரிப்போர்ட்டில், முக்கியமான ஒரு விவகாரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக முன்னின்று `அனைத்து’ பணிகளையும் கவனிப்பதே அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தானாம். ‘‘ரிசல்ட் எப்படியிருந்தாலும், இந்த பட்டியலில் இருக்கின்ற ஆளுங்கட்சிப் புள்ளிகள் தேர்தலுக்குப் பிறகு களையெடுக்கப்படுவார்கள். அமைச்சர் துரைமுருகன் அந்த அளவுக்குக் கொதித்துப் பேசினார்’’ என்கின்றனர் இந்த விவகாரத்தை அங்கு கவனித்துவிட்டு வந்த நிர்வாகிகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.