“26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்… பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது” – மம்தா காட்டம்

புதுடெல்லி: “26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட வாராது. நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கியுள்ளது” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார்.

இது குறித்து அவர் கூறியது: “26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட வாராது. நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அல்ல, உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளது.

ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சிபிஐ, என்ஐஏ, மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டவற்றை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில் பாஜக, மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 2016-ம் ஆண்டில் பணிநியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘சட்ட விரோதமாக நடைபெற்ற 2016-ம் ஆண்டு ஆசிரியர் பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பெற்ற சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவற்றை 12 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் திரும்பி செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.