ரத்னம் விமர்சனம்: ஹரி – விஷால் காம்போவின் `ரத்த' விருந்து; புதுமைகள் இருந்தும் ஏமாற்றமளிப்பது ஏன்?

வேலூரில் எம்.எல்.ஏவாக உள்ள பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாகவும் “நல்ல மனசுல்ல” ரவுடியுமாக இருக்கிறார் ரத்னம் (விஷால்). வேலூருக்கு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதவரும் மல்லிகா (பிரியா பவானிசங்கர்) மீது இனம்புரியாத அன்பு ரத்னத்திற்கு வருகிறது. மல்லிகாவைக் கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பு ராயுடு (ஹரீஷ் பேரடி) ராகவா ராயுடு (வேட்டை முத்துக்குமார்) என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம்.

ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார், தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள், இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா போன்ற கேள்விகளுக்கு ரத்த மழையால் நம்மை நனைத்து பதில் சொல்கிறது ஹரியின் ‘ரத்தம்’ ‘ரத்னம்’.

ரத்னம் படத்தில்…

வழக்கமான ஹரி பட ஹீரோவாக நன்றாகவே பொருந்தி, ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கிறார் விஷால். சென்டிமென்ட் காட்சிகளில் தன் உடல்மொழியால் மாறுபட்ட நடிப்பை வழங்க முயன்றிருக்கிறார். அதில் சதம் அடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் பாஸ் ஆகித் தப்பிக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன்தான் செயற்கையாக வெளிப்படுகிறது. உணர்ச்சிக்குவியலாக உலாவரும் மல்லிகா கதாபாத்திரத்தை, நன்றாக உள்வாங்கி திரையில் கொண்டுவந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். முக்கியமாக, ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் உயிர் பயம் எனத் தத்தளிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். தொடக்கத்தில் மட்டும் சுவாரஸ்யம் தரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், ஏனைய இடங்களில் பெரிதாகத் தாக்கம் தரும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும், கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, வேட்டை முத்துகுமார் என மூன்று வில்லன்களில் முரளி சர்மா மட்டும்தான் ஓரளவிற்குப் பயமுறுத்துகிறார். விஜயகுமார், ஜெயபிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் போன்ற துணை கதாபாத்திரங்கள், ரத்த வெள்ளத்திற்கு இடையே தலைமட்டும் காட்டுகிறார்கள். இரண்டு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. உருவக் கேலி காமெடிகளை அவர் இன்னும் தூக்கிக்கொண்டு சுற்றுவது சோகம்.

வில்லன்கள் இன்ட்ரோ, ஹீரோ இன்ட்ரோ, ஹீரோயின் இன்ட்ரோ, இருவருக்குமான பின்கதை எனச் சிதறலாக ஆரம்பித்து, ஹீரோயினைக் காக்க ஹீரோ களமிறங்கும் இடத்தில் ஒருவழியாக மையக்கதையை வந்தடைகிறது இந்த ‘ஹரி டைப்’ படம். அதன்பின், ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு காமெடி காட்சி, ஒரு சண்டைக்காட்சி, ஒரு சென்டிமென்ட் காட்சி, ரிப்பீட்டு.. என இறுதிக்காட்சி வரை திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத பெண்ணிற்காக பக்கத்து மாநில தாதாக்களையே எதிர்க்கக் களமிறங்கும் ஹீரோ என்ற மாஸ் ஆக்‌ஷனுக்கான எவர்க்ரீன் ஒன்லைன், அதே எவர்க்ரீன் சென்டிமென்ட் என அயற்சியையே தந்திருக்கிறார் இயக்குநர்.

ரத்னம் படத்தில்…

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இடைவேளை கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகள், ஹரி ஸ்டைலிலான பரபரப்பும் ஒர்க் அவுட் ஆகி, திரைக்கரைக்கு வலுசேர்த்திருக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகள் கொடுக்க வேண்டிய விறுவிறுப்பு நன்றாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் முழுவதும் அது மட்டுமே இருப்பது, லிட்டர் கணக்கிலான ரத்தம் வழிந்து ஓடுவது, உறுப்புகள் அறுப்பதை, அறுபட்டுக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

இந்த ரத்த குளியலுக்கு இடையே ட்விஸ்ட்டுகளுக்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பின்கதை, அதை நம்பத்தன்மையே இல்லாத காட்சிகளால் விவரித்தது என இரண்டாம் பாதி சோதனை ஓட்டமாக மாறிப்போகிறது. வில்லன்கள் துரத்த, ஹீரோயின் ஓட, ஹீரோ காப்பாற்ற எனத் திரும்பத் திரும்ப இதே பாணியிலான காட்சிகள்தான் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

ரத்னம் படத்தில்…

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூடுதல் மெனக்கெடுதலைப் பார்க்க முடிகிறது. ஹரி படங்களுக்கே உரிய ‘பரபர’ திரைமொழியிலிருந்து விலகி, சிறிது நிதானத்தைக் கொண்டு வந்தவிதத்தில் கவனிக்க வைக்கிறது டி.எஸ்.ஜேவின் படத்தொகுப்பு. தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் ‘உயிரே என் உயிரே’ மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது. பின்னணி இசையில்தான் மிகுந்த ஏமாற்றமளிக்கிறார். சண்டை வடிவமைப்பில் கனல் கண்ணன், பீட்டர் ஹீன், திலீப் சுப்புராயன், விக்கி ஆகியோரின் உழைப்பின் பலனைப் பார்க்க முடிகிறது.

“போலீஸும் ரவுடியும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தாதான் ஊர் நல்லா இருக்கும்”, “காசுக்காகக் கொலை பண்ற ரவுடி இல்ல. நான் கொள்கைக்காகக் கொலை பண்ற ரவுடி” என பொழிந்துகொண்டே இருக்கும் வசனங்களை, இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியேற்ற வேண்டிய வேலையும் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. இவை தவிர, போலீஸ் என்கவுன்டர், கொலைக்குத் தீர்வு கொலையே என்று சொல்வது போன்ற அரசியல் புரிதலற்ற போக்கும் படத்தில் நிறையவே இருக்கிறது. ஹீரோவிற்கும் ஹீரோயினுக்குமான உறவை அணுகிய விதமும், அதைக் கடைசி வரை கொண்டு சென்ற விதமும் மட்டுமே படத்திலிருக்கும் பெரிய ஆறுதல்.

ரத்னம் படத்தில்…

நல்லவரான ரவுடி ஹீரோ, அதைவிட நல்லவரான அப்பாவி ஹீரோயின், இவர்களுக்கு எதிராக உலகத்திலேயே கொடூரமான வில்லன்கள் எனத் தனது வழக்கமான பாணியை வலுக்கட்டாயமாக 2024க்கும் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஹரி. தனது திரையாக்கத்தில் இருந்து விலகி சிறிது புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார் என்றாலும், ரத்த வெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட, இந்த `ரத்னத்தை’ முழுதாக ரசிக்க முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.