தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் – கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்

பெங்களூரு,

பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் தெரிந்தும் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.