“முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்” – ராகுலை விமர்சித்து காரி கேஸ்பரோவ் பதிவு

மாஸ்கோ: முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள் அப்புறம் செஸ் டாப் வீரரை வெல்லலாம் என்று உலகின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த ரஷ்யர் கேரி காஸ்பரோவ் சமூகவலைதளத்தில் பதிவிட்டதும், பின்னர் அதனை விளக்கி மேலுமொரு பதிவைப் பகிர்ந்ததும் கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (சனிக்கிழமை) உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை கருத்தில் கொண்டு வகுத்துள்ளது. இந்த முடிவு பாஜகவை, அதன் ஆதரவாளர்களை கலங்கடித்துள்ளது.” எனப் பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே ராகுல் காந்தியும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனக்கு உள்ள செஸ் மீதான ஆர்வம் பற்றியும் கேரி காஸ்பரோவ் தான் தனது விருப்பமான செஸ் வீரர் என்றும் பேசியிருந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதனை ஒட்டி எக்ஸ் பயனர் ஒருவர் நல்லவேளை கேரி காஸ்பரோவ், “விஸ்வநாதன் ஆனந்த் எல்லோரும் சீக்கிரம் ஓய்வு பெற்றனர். இல்லாவிட்டால் அவர்கள் இக்காலத்தில் பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார். அதில் கேரி காஸ்பரோவையும் அந்தப் பதிவர் டேக் செய்திருந்தார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய கேஸ்பரோவ், “முதலில் ரேபரேலியில் வெல்லடும். அதன்பின்னர் டாப் வீரர்களை எதிர்கொள்ளலாம்” எனப் பதிவிட்டிருந்தார். இந்த அரசியல் பதிவு யாரும் எதிர்பாராமல் வந்திறங்கிய நிலையில் பேசுபொருளானது.

பின்னர் சுதாரித்துக் கொண்ட கேஸ்பரோவ், “நான் இந்திய அரசியலை முன்வைத்து செய்த சிறு பகடியை ஏதேனும் நிபுணரின் கருத்துபோல் எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்குப் பிரியமான விளையாட்டில் ஓர் அரசியல்வாதி தலையிடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.” என்று தனது கருத்துக்கான விளக்கப் பதிவையும் பகிர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.