ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ, கும்லா பகுதிகளில் பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாரதத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், ‘பாகிஸ்தான் எங்களை தாக்குகிறது’ என்று உலக நாடுகளிடம் முறையிட்டு அழுதனர்.
பாஜக ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்போது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடம் கதறி அழுது முறையிட்டு வருகின்றனர். எனவே தற்போதைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் இடைவிடாது பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் ஊழல் கூட்டாளிகள். இரு கட்சிகளும் இணைந்து மாநிலத்தின் வளங்களை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றன.
நான் 25 ஆண்டுகள் முதல்வராக, பிரதமராக பணியாற்றி உள்ளேன். இந்த காலத்தில் ஒரு பைசாகூட ஊழல் நடக்கவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.