ரூபி மனோகரனுக்கு ரூ.78 லட்சம்; தங்கபாலுவுக்கு ரூ.11 லட்சம்: ஜெயக்குமார் தனசிங்கின் புதிய கடிதத்தால் பரபரப்பு

திருநெல்வேலி: “நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் இருந்து 89 லட்ச ரூபாயை கண்டிப்பாக வசூலிக்க வேண்டும்” என ஜெயக்குமார் தனது மருமகனுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, ஏப். 30-ம் தேதியிட்ட கடிதத்தை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியிருந்த நிலையில், தற்போது தனது மருமகனுக்கு ஜெயக்குமார் எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. அக்கடிதத்தில், “நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தனக்கு 78 லட்சம் ரூபாய் தர வேண்டும்.

அதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு 11 லட்சம் ரூபாய் தர வேண்டும். இருவரிடமிருந்தும் மொத்தம் 89 லட்சம் ரூபாய் கண்டிப்பாக வசூலிக்கப்பட வேண்டும்”,என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயக்குமாரிடம் இருந்து யார் யார் எவ்வளவு பணம் வாங்கி உள்ளனர் என்பது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினர் யாரும் தான் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ஜெயக்குமார், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு ‘மரண வாக்குமூலம்’ எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலரது பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் லட்சக்கணக்கில் பணம்வாங்கிக் கொண்டு, அரசு ஒப்பந்தங்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.