இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்| Dinamalar

கொழும்பு:’இலங்கையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என, அந்நாட்டு மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.
அண்டை நாடான இலங்கையில், ௧௯௭௯ல் பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், பயங்கரவாதிகள் என சந்தேகப்படுவோரை விசாரணை நடத்தாமல் கைது செய்ய, போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ‘பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த வேண்டும்’ என, இலங்கை அரசை, ஐரோப்பிய யூனியனும், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலும் வலியுறுத்தின. இதையடுத்து, பயங்கர வாத தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அதற்கான மசோதாவை இலங்கை அரசு கடந்த வாரம் பார்லி.,யில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இலங்கை மனித உரிமை கமிஷன் தலைவர் ரோஹினி மாரசிங்கே, கொழும்பில் கூறியதாவது:பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே, இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு, இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளாமல், அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.