இலங்கை அணியுடனான டி20 தொடரில் கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஒரு நபரின் கையில் அதனைக் கொடுத்து அழகு பார்த்தார். இதுகுறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
எப்போதும் இந்திய அணிஒரு தொடரின் கோப்பையை கைப்பற்றும் போது அணியில் யாரேனும் இளம் வீரர் அறிமுகமாகி இருந்தால் அவர்களின் கையில் கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆவேஷ் கான் வெற்றி கொண்டாட்டத்தில் கோப்பையை வைத்து ஈடுபட்ட நிலையில் ரோகித் சர்மா செய்த சம்பவம் பல குழப்பத்தை ஏற்படுத்தியது.
காரணம் ஆவேஷ் கானிடம் கோப்பையை வாங்கி சென்ற ரோகித் புதிதாக ஒரு நபரிடம் கொடுத்து அந்த வெற்றியை கொண்டாடினார். அந்த நபர் யார் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஜெய்தேவ் ஷா என்ற அந்த நபர் இந்திய அணியில் டீம் மேனேஜராக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தான் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இதனால் தான் அவரிடம் கோப்பையை கொடுத்து ரோகித்சர்மா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஜெய்தேவ் ஷா ஏற்கனவே பிசிசிஐ செயலாளராக இருந்த நிரஞ்சன் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.