டெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்து வரும் நிலையில் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக ஐ.டி. திரை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் சுமார் 80,000 முதல் 1 லட்சம் ஐ.டி. பணியிடங்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இந்த பணியிடங்களில் 70% வேலைகள் இந்தியாவிற்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக டெலாஸ் நகரில் செயல்படும் ஐ.டி. ஆய்வு நிறுவனமான எவரெஸ்ட் குழுமம் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. போர் மேலும் உக்கரமடைந்தால் விலைவாசி உயர்வின் காரணமாக ஐ.டி. சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்க கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.