பிரதமர் மோடியை சந்தித்த பிரமோத் சாவந்த்:  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி 

புதுடெல்லி: கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடியை சந்தித்த பின்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும்.

எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

டைம்ஸ் நவ்-வீட்டோ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 14, காங்கிரஸ் 16, இதர கட்சிகள் 10 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க அக்கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

“2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வலுவான செயல்பாடு குறித்து பிரதமரிடம் விளக்கினேன். மக்களின் ஆசியுடன் கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தேர்தல் பணி எங்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.